சந்திராஷ்டமம்

👉 ஜோதிட சாஸ்திரத்தில் நாம் பலன்களையும் எந்தெந்த நேரங்களில் என்ன காரியங்கள் தொடங்கலாம், எந்த காலகட்டங்களை தவிர்க்க வேண்டும் போன்றவற்றையும் தெரிந்துகொள்வதற்கு பல வழிமுறைகள் உள்ளன. அந்த வகையில், காலம் காலமாக இருந்து வரும் ஒரு நடைமுறை, சந்திராஷ்டமம்.

👉 சந்திராஷ்டமம் என்பது இரண்டேகால் நாட்களை கொண்டது. இந்த நாட்களில் புதிய முயற்சிகள், சுப காரியங்கள் ஆகியவற்றில் ஈடுபடலாகாது என்று நம் முன்னோர்கள் சொல்லியுள்ளனர்.

👉 நாம் பிறந்த ராசியிலிருந்து எட்டாவது ராசியில் எந்த தினம் சந்திரன் சஞ்சரிக்கிறாரோ அன்றைய தினம் சந்திராஷ்டம தினமாகும். அஷ்டமம் என்றால் எட்டு. சந்திராஷ்டமம் என்றால் சந்திரன் எட்டில் இருப்பதாகும். இது அடிப்படை ஜோதிட இலக்கண விதியாகும்.

👉 நமது முன்னோர்கள் ராசியை கருத்தில் கொண்டு சந்திராஷ்டமம் (எட்டாவது ராசி) என்று பெயரிட்டனர். எனவே சந்திராஷ்டமத்தை ராசி ரீதியாக பார்ப்பதே சிறந்ததாகும்.

🌛 சந்திரன் இருக்கும் ராசியை குரு பார்த்தால் சந்திராஷ்டமம் கிடையாது. இதில் குருவின் நேரடியான ஏழாம் பார்வை ஆகாது. மற்ற ஐந்து, ஒன்பது ஆகிய பார்வைகள் தோஷத்தை நீக்கும். இந்த குரு பார்வை கணிதம் கோச்சாரத்திற்கு மட்டும் பொருந்துவதாகும்.

🌛 சந்திராஷ்டம தினத்தன்று அமாவாசையாக இருந்தால் சந்திராஷ்டம தோஷம் இல்லை.

🌛 தான் பிறந்த நட்சத்திரத்திலிருந்து 16, 18வதாக வரும் நட்சத்திரத்தில் சந்திரன் இருந்தால் சந்திராஷ்டம தோஷம் இல்லை.

🌝 16வதாக வருவதை மைத்திர தாரை, அதாவது நட்பு நட்சத்திரம் என்றும் 18வதாக வருவதை பரமமைத்திரம், அதாவது நெருங்கிய நட்பு என்றும் மேலும் சாதகமானது என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

🌝 17வது நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம தோஷம் உண்டு, என்பதால் நாள்காட்டிகள் அந்த 17வது நட்சத்திரத்தை மட்டும் சந்திராஷ்டமமாக கூறியுள்ளன.

🌝 15, 19வது நட்சத்திரங்களில் சந்திரன் இருக்குபோது அது அஷ்டம ராசியாக அமைந்தால் சந்திராஷ்டமமாகிவிடும்.

👉 முடிவாக சந்திராஷ்டம நாட்களான இரண்டே கால் நாட்களிலும் எந்த விதமான சுபகாரியங்களையும், புதிய முயற்சிகளையும் செய்யாமல் ஒதுக்கிவிடுவது நல்லது. அதே நேரம், வேறு வழியில்லாமல் செய்தே ஆகவேண்டும் என்ற சூழ்நிலை ஏற்படுகிறபோது, மேற்கண்ட விதி விலக்குகளை ஆராய்ந்து செயல்படுவது நல்லது.